தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா குறித்து தொடர்ந்து வதந்தியை பரப்பிவரும் 50 பேர் மீது நடவடிக்கை எடுக்க பொலிசார் தீவிரம் காட்டி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து தேவையில்லாத வதந்திகள் சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வருகிறது. பேஸ்புக், வாட்ஸ்-அப் உள்ளிட்டவற்றில் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்த வதந்திகள் தொடர்ந்து வெளியாகி கொண்டே வருக்கின்றன.
பிரான்ஸ் தமிழச்சி என்ற பெண் தனது பேஸ்புக் பக்கத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து வெளியிட்ட பதிவு பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த பதிவை மேற்கொண்டதற்காக அவருக்கு எதிராக இணைய தளங்களில் கண்டனங்களும் குவிந்தன.
இது தொடர்பாக அ.தி.மு.க. தகவல் தொழில் நுட்ப பிரிவு சார்பில் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் செய்யப்பட்டது. இதனையடுத்து தமிழச்சி மீது சைபர்கிரைம் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
திருப்பரங்குன்றம் காவல்துறையினரும் அவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். இது போன்று வதந்தியை பரப்புபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறையினர் எச்சரித்துள்ளனர்.
ஆனால் முதலமைச்சரின் உடல் நிலை குறித்த வதந்தி அவ்வப்போது இணைய தளங்கள் மூலமாக பரப்பப்பட்டுக் கொண்டே தான் இருக்கிறது.
இதுபோன்ற வதந்திகளை இணையதளம் வாயிலாக பரப்புபவர்களை போலீஸார் தற்போது கண்டுபிடித்துள்ளனர். சுமார் 50 பேர் வரை இதனை பரப்பி விடுவதும் தெரிய வந்துள்ளது. அவர்கள் அனைவரையும் போலீஸார் கண்காணித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து அவதூறு பரப்புபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தொடர்ந்து புகார்கள் குவிந்த வண்ணம் உள்ளன. 30ற்கும் மேற்பட்டவர்கள் இ-மெயில் மூலமாகவும் புகார் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Write comments