ரியோ ஒலிம்பிக் போட்டிகளில் சிறப்பாக விளையாடிய தீபா கர்மாக்கர் தனக்கு கொடுக்கப்பட்ட BMW காரை திரும்ப ஒப்படைப்பதாக தெரிவித்துள்ளார்.
கடந்த ஆகஸ்ட் மாதம் பிரேசில் ரியோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் சாதனை படைத்த விரர்களுக்கு பல்வேறு பரிசுத்தொகைகள் வழங்கப்பட்டது. அந்த வகையில் ஜிம்னாஸ்டிக் பிரிவில் பக்கம் வெல்ல முடியாமல் போனாலும் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி நான்காவது இடத்தை பிடித்த தீபார் கர்மாக்கருக்கு ஐதரபாத் பாட்மின்டன் சங்கம் BMW காரை பரிசாக வழங்கியது. கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் டென்டுல்கர் தீபா, சிந்து, சாக்ஷி மாலிக் ஆகியோருக்கு BMW காரை பரிசாக வழங்கினார்.
தற்போது தனக்கு கிடைத்த அந்த காரை திரும்ப ஒப்படைப்பதாக தீபா கர்மாக்கர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவரது பயிற்சியாளர் பி.எஸ் நந்தி கூறியதாவது "தீபாவிற்கு வழங்கப்பட்ட காரை திரும்ப ஒப்படைக்கிறோம். இது தீபா தான் சொந்தமாக எடுத்த முடிவு அல்ல மாறாக அவரது குடும்பத்தார்கள் அனைவரும் சேர்ந்து ஒருமித்தமாக எடுக்கப்பட்ட முடிவு. இதற்கு இரண்டு காரணங்கள் இருக்கிறது. ஒன்று தீபா வசிக்கும் அகார்தலா பகுதியில் BMW காரை ஓட்டும் அளவிற்கு சாலை வசதிகள் கிடையாது. அவர் வசிக்கும் பகுதியில் பெரும்பாலும் குறுகிய சாலைகளே இருக்கின்றது. இரண்டாவதாக BMW காருக்கான செர்வீஸ் மையம் எங்குமே இல்லை மேலும் அந்த காரை பரமாரிப்பது என்பது தீபாவிற்கு மிக சிரமமான விசயம். ஆதலாலேயே அவர் காரை திரும்ப ஒப்படைக்கவிருக்கிறார். இது தொடர்பாக ஐதரபாத் பாட்மின்டன் சங்கத்தின் மேலாளர் சாமூண்டீஸ்வரநாத் அவர்களிடம் பேசிவிட்டோம். அவர்கள் எந்த பிரச்சனையும் இல்லை என தெரிவித்துவிட்டார்.
காரை திரும்ப பெற்றுக்கொண்டு அதன் மதிப்பிலான தொகையை தீபாவின் வங்கி கணக்குகளில் போட்டாலும் சரி, அல்லது அவர்களாகவே ஒரு தொகையை கொடுத்தாலும் சரி இதில் தீபாவிற்கும் அவரது குடும்பத்தார்களுக்கும் திருப்திதான்" இவ்வாறு அவர் தெரிவித்தார்.
ஜிம்னாஸ்டிக் பிரிவில் முதன்முறையாக இந்தியாவின் சார்பில் கலந்து கொண்ட வீராங்கனை என்ற பெயரை தீபா கர்மாக்கர் இந்த ஒலிம்பிக் போட்டியில் பங்கெடுத்தது மூலம் பெற்றார். அடுத்து ஜெர்மனியில் நடைபெறவுள்ள சேலஞ்சர்ஸ் கோப்பையில் இந்தியாவின் சார்பாக பங்கேற்க உள்ளார்.

No comments:
Write comments