Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Oct 12, 2016

கொத்தடிமை முறை முற்றிலும் ஒழிந்துவிட்டதா..?

still slave system is being practised

மனிதகுலத்தின் முதலாவது அமைப்பு என்றால் அது பொதுவுடைமையே. இயற்கையில் கிடைத்த காய்கனிகளை உண்டு விலங்கை வேட்டையாடிப் பகிர்ந்து உண்ட சமுதாயம் ஆடு, மாடுகளை வளர்க்கத் தொடங்கியது. மேய்ச்சல் நிலங்களைத் தேடியது. அவர்களின் தேவையும் உணவுத் தேவையும் அதிகரிக்கத் தொடங்கியது. இயற்கை வளங்களைப் பயன்படுத்திக் கொள்ள போட்டி உருவானது. போட்டியில் தோற்றவர்கள் கொல்லப்பட்டனர். அடுத்த கட்டத்தில் தோற்றவர்கள் வெற்றி பெற்றவர்களுக்கு அடிமைகளின் எஜமானர்களாக மாறி, உரிமையாளர், உரிமையற்றவன் என்ற பாகுபாடும் வர்க்கப் பேதமும் உருவாகி அடிமைச் சமுதாயம் ஏற்பட வழிவகுத்தது.

ஜக்கிய அமெரிக்கா நாடுகள் உருவான பின் 1787-ஆம் ஆண்டு பிலடெல்பியா நகரில் மாநாடு நடைபெற்றது. அதில் பன்னாட்டு அடிமை முறை பற்றி விவாதிக்கப்பட்டது. இதை ஒழிக்க 20 ஆண்டுகள் தேவைப்படும் என்று அந்த மாநாட்டில் கூறப்பட்டது. பிரான்சில் 1789-ஆம் ஆண்டு ஒழிக்கப்பட்டது. இங்கிலாந்தில் 1808-ல் தடை போட்டது. 1833-ல் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டது. அமெரிக்காவில் உள்நாட்டுப் போர் முடிந்ததும் 1865-ல் ஒழிக்கப்பட்டது. 1948-ல் ஜக்கிய நாடுகள் பொதுச் சபை அடிமை முறை சட்டத்திற்கு மாறானது என்று அறிவித்தது.

இருபதாம் நூற்றாண்டில் ஜ.நா. சபை சர்வதேசத் தொழிலாளர் அமைப்பு போன்றவை பழைய மற்றும் தற்கால அடிமைத்தனத்தைத் தடுப்பதற்குப் பல சட்டங்களை இயற்றியுள்ளன. ஓரிரண்டு நாடுகளைத் தவிர ஒரு காலத்தில் பரவலாக வழக்கில் இருந்த அடிமை முறை இன்றும் ஏறத்தாழ எல்லா நாடுகளிலும் நீடிக்கிறது.

சர்வதேச அளவில் உலகம் முழுவதும் பெண்கள், குழந்தைகள் உட்பட மொத்தம் 4.58 கோடி பேர் நவீனக் கொத்தடிமைகளாக உள்ளனர். இது கடந்த 2014-ஆம் ஆண்டு 3.58 கோடியாக இருந்தது. கொத்தடிமைகள் அதிகம் உள்ள 167 நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. இது கடந்த 2014-ல் 1.43 கோடியாக இருந்தது. தற்போது 1.83 கோடியாக உயர்ந்துள்ளது.

இந்த முறை நீடிக்க உலகில் நிலவும் ஏழை- பணக்கார சமூக ஏற்றத் தாழ்வானது அடிமைகளை உருவாக்கிக் கொண்டே இருக்கிறது. அடிமைகளால் பயனடைவோர் உலகில் வறுமை தொடர்ந்து நிலைக்க வேண்டும் என்று விரும்புகின்றனர்.

கர்நாடக மாநிலத்தில் ஒரு நிறுவனம் செய்த ஆய்வு விவரங்களின்படி அடிமை முறை வடிவத்தில் மாறியுள்ளது. தற்போதைய சூழலில் அன்றாட வாழ்வாதாரச் செலவுகள் அதிகரித்து வருகின்றன. அதனைத் தாக்குப்பிடிக்க முடியாமல் பல குடும்பங்கள் தவிக்கின்றன. திருமணச் செலவுகள் கடுமையாக அதிகரிப்பு, மருத்துவச் செலவுகளைச் சந்திக்க முடியாத நிலை, வறுமை, வேலை வாய்ப்புபின்மை ஆகியவையே கொத்தடிமைகளை உருவாக்குகிறது.

இதனால் ஏற்படக்கூடிய வறுமையை தொழில் நிறுவனங்கள் பயன்படுத்தி முப்பதாயிரம் முதல் ஒரு லட்சம் வரை முன் தொகை கொடுத்து அவர்களை முழுமையாக அவர்களுக்குத் தெரியாமலேயே அவர்களை அடிமையாக்குகிறது. குறிப்பாக தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர் அதிகம் சிக்கியுள்ளனர். வேளாண்துறையில் இருந்துவந்த கொத்தடிமை முறை மடை மாற்றம் செய்யப்பட்டு கார்ப்பெட் தயாரிப்பு நிறுவனங்கள், கல்குவாரிகள், செங்கல் சூளைகள், காபி தோட்டங்கள், துரித உணவகங்கள், ஐடி நிறுவனங்கள் உள்ளிட்ட துறைகளுக்கு மாற்றப்பட்டிருக்கின்றன. மேலும் இது போன்ற தொழில்களில் ஈடுபட்டு வரும் கொத்தடிமைகளின் எண்ணிக்கையும் அதிகரித்திருக்கிறது.

தெற்காசியாவிலேயே கொத்தடிமை முறைக்கு எதிராகச் சட்டமியற்றிய முதல் நாடு இந்தியா என்பது நாம் பெருமைபட்டு கொள்ள வேண்டிய விஷயம். ஆனால் சட்டம் இயற்றப்பட்ட நேரத்தில் இம்மண்ணில் அனைத்தும் துடைத்தெறியப்பட்டிருக்க வேண்டும். இது நம் அடிப்படை மனித மாண்பிற்கு, கண்ணியத்திற்கு, சோசலிச சமூக அமைப்பிற்கு முற்றிலும் விரோதமான அருவருக்கத்தக்க முறையாக உள்ளது. 1976-ஆம் ஆண்டு கொத்தடிமை முறை ஒழிப்புச் சட்டம் இயற்றப்பட்டது. 40 ஆண்டுகள் ஆன பின்னும் கொத்தடிமை முறை ஒழிக்கப்படவில்லையென்றால் அடிமை முறை ஒழிப்பில் அக்கறையின்மையும் அரசியல் உறுதிப்பாடு இன்மையுமே இம்மண்ணில் தொடர்ந்து நிலவக் காரணமாகிறது. எத்தனையோ சட்டங்கள் அமல்படுத்திய பின்னரும், எவ்வளவோ சமூக மாற்றங்கள் நிகழ்ந்த பின்னரும் அடிமை முறை என்பது இன்றைக்கும் நம் சமூகத்தில் ஏதாவது ஒரு வடிவில் இருந்து கொண்டிருக்கிறது. அன்றைக்குப் பண்ணை அடிமை முறை. இன்று ஜ.டி துறை உள்ளிட்ட பல துறைகளில் கொத்தடிமை முறை உள்ளது. காலத்துக்கு காலம் அடிமை முறை தன் உருவத்தை மாற்றிக் கொள்கிறது அடிமையாகிறோம், கொத்தடிமையாகிறோம் எனத் தெரியாமலேயே அடிமையாகிறது நம் ஏழைச் சமூகம்.

தமிழகத்தில் வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து காத்திருப்போரின் எண்ணிக்கை 93 லட்சம் பேர். வேலையில்லாததால் ஏற்படும் பொருளாதாரப் பிரச்சனை, ஒருவர் எந்த வேலையும் செய்யத் தயார் என்ற நிலைக்குத் தள்ளுகிறது. இதுதான் அடிமை முறைக்கு வழிவகுக்கிறது.

படிக்காத பாமரர்களை மட்டுமல்ல, படித்த பொறியாளர்களையும் அடிமையாக நடத்தும் அவலம் நாட்டில் நடந்து வருகிறது. இது தற்போதைய நவீன அடிமை முறை. மேலும் தற்போதைய மற்றும் முந்தைய அரசுகளின் தவறான பொருளாதாரத் திட்டமிடுதலால் வேளாண்மை அழிந்து நகர்மயமாக்குதல் வேகமாக பரவலாக்கப்படுகிறது.

இதனால் பொருளாதாரம் ஒரு குறிப்பிட்ட பிரிவினரிடம் மட்டும் மேலும் மேலும் சேர்ந்துகொண்டிருக்கிறது. மற்றொருபுறம் பெருவாரியான அடித்தட்டு, ஒடுக்கப்பட்ட மக்கள் முன்னிலும் அதிகமாய் வறுமையை அனுபவித்து வருகிறார்கள். இதன் விளைவாக தனியார் நிறுவனங்களிடம் கிடைத்த வேலைக்கு தஞ்சமடையும் நிர்ப்பந்தம் நிலவி வருகிறது.

வேலைக்காக இடம் பெயரும் தொழிலாளர்களில் உடனடியாகக் கொத்தடிமைக்கு உள்ளாக்கப்படுபவர்கள் வெளி மாநிலங்களில் உள்ள கம்பெனிகளுக்கு வேலைக்குச் செல்லும் தமிழக சிறுவர்கள் தான்.

பெற்றோரின் ஏழ்மையை அறிந்து கொண்டு புரோக்கர்கள் அவர்களை அணுகி கொஞ்சம் முன்பணம் கொடுத்து அவர்களை கூட்டிச் செல்வது இதில் அதிகம் இது ஒரு விதம்.

மற்றொரு விதம் ஏதோ ஒரு காரணத்திற்காக வீட்டை விட்டு வெளியேறும் சிறுவர்கள் புரோக்கர்களிடம் சிக்கிக்கொள்வது இந்த இரண்டு விதத்திலும் சிறுவர்கள் சித்ரவதைக்கு உள்ளாவது நிச்சயம்.

இவர்களிடம் அதிப்படியான நேரம் வேலை வாங்குவது, ஓய்வு இல்லாமல் உழைக்கச் சொல்வது, சரியான உணவு தராமல் சித்ரவதை செய்வது போன்றவை நடக்கின்றன. அதற்கும் மேலாக கொதிக்கும் எண்ணெய் சட்டியில் கையை விட வைத்தனர். கண்களில் மிளகாய்ப் பொடியைத் தூவினர். பிறப்புறுப்பில் எட்டி உதைத்தனர் என நெஞ்சை உறையவைக்கும் தகவல்கள் நாளிதழ்களில் வந்த செய்திகளைப் பார்த்ததன் மூலம் கொத்தடிமை முறை தொடர்வதை உறுதி செய்ய முடிகிறது. தமிழக மக்கள் தொகையில் 35 சதவீதம் பேர் சிறுவர்- சிறுமிகள். இவர்களில் கணிசமானோர் தினசரி காணாமல் போவதாக புகார் வருகிறது. இவர்களில் பலர் திரும்பக் கிடைப்பதே இல்லை என தமிழக அரசு மிஸ்ஸிங் சைல்டு பீரோ அமைப்பு கூறுகிறது.

தெற்காசிய நாடுகளில் கொத்தடிமை முறைக்கு எதிராகச் சட்டமியற்றிய நாடு இந்தியா. 1975-ஆம் ஆண்டு அக்டோபர் 24-ஆம் தேதி கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு அவசரச் சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டது. 1976-ஆம் ஆண்டு இயற்றப்பட்ட கொத்தடிமை முறை ஒழிப்புச் சட்டம் வரலாற்றுச் சிறப்புமிக்க உயிர் துடிப்புள்ள ஆவணமாகும்.

இந்தியாவில் சட்டங்களுக்குப் பஞ்சமே இல்லை. உலகிலேயே அதிகமான சட்டங்களை இயற்றியுள்ள நாடு இந்தியா தான். ஆனால், அமலாக்கம் என்று வரும்போது அலங்கார அணிகலன்களாக இருக்கின்றதே தவிர, நிஜமான வலுவான செயலாக்கம் மிக்க ஆவணங்களாக இல்லை என்று கூறுகிறார் நீதிபதி.

மேலும் கொத்தடிமை முறையின் அருவெருப்பூட்டும் தன்மைகளைப் பற்றி உச்ச நீதிமன்ற நீதிபதி பி.என். பகவதி பந்துவா, முக்தி மோர்ச்சா வழக்கின் தீர்ப்பில் கொத்தடிமை முறை என்பது இந்த நாட்டில் நூற்றாண்டுகளாக இருந்து வருகிறது. பொருளாதார நிலைகளில் உள்ள இடைவெளி தான் இதற்குப் பிரதானக் காரணம். அரசியல் சுதந்திரம் பெறுவதற்கு வெகுகாலம் முன்பிருந்தே நாட்டின் பல்வேறு பகுதிகளில் கொத்தடிமைத் தொழிலாளர் முறை இருந்து வருகிறது. இது வெட்கப்படத்தக்க அம்சமாகும்.

ஏராளமான மனிதர்களின் துன்ப, துயரங்களை- வறுமையை வைத்து வியாபாரம் நடத்தும் சமூக மற்றும் பொருளாதார ரீதியாக சக்தி படைத்த நபர்களின் சுரண்டலே இதற்கு அடிப்படையாகும்.

இந்தக் கொத்தடிமை முறை அடிப்படையான மனித கண்ணியத்திற்கு இழுக்கு என்பது மட்டுமல்ல, அரசியல் சட்ட மாண்புகளை முற்றிலும் மீறுவதாகும் அருவெருப்பூட்டுவதுமாகும் என்கிறார்.

நிலச்சீர்திருத்தச் சட்டங்களை அமல்படுத்தவேண்டும். கட்டாய இலவசக்கல்வி வழங்கவேண்டும். தற்போதைய மக்கள் தொகைக்கு ஏற்ப அரசுத் துறைகளில் வேலை வாய்ப்புக்களை உருவாக்க வேண்டும். சமரசமின்றி இட ஒதுக்கீட்டை அமலாக்க வேண்டும். இதைத் தனியார் துறையிலும் பின்பற்ற வேண்டும். விவசாயத்துறையில் உற்பத்தியைப் பெருக்க வேண்டும். கிராமப்புறங்களில் இருந்து நகர்புறங்களை நோக்கி மக்கள் செல்லாமல் இருக்க கிராமப்புறங்களில் புதிய வேலை வாய்ப்புக்களை உருவாக்க வேண்டும். சுகாதாரம் உள்ளிட்ட மருத்துவ வசதிகள் எளிய மக்களுக்குக் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். சமூக நலத்திட்டங்களை எளிய மக்களுக்கு கிடைக்கச் செய்யவேண்டும். இதுவே ஒட்டு மொத்த சமூக மாற்றத்திற்கான தீர்வு.


நன்றி: பி. பாலசுப்பிரமணியம்
சி.பி.எம் கட்சி, விருதுநகர் மாவட்டம்

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic