வருமான வரி சட்டத்திருத்த மசோதாவிற்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்துள்ளார். குடியரசுத் தலைவரின் ஒப்புதலை அடுத்து கணக்கில் காட்டாத வருமானத்திற்கு 50 சதவிகிதம் வரி கட்ட வேண்டி நேரிடும். வங்கிகளில் பழைய ரூ.500, ரூ.1,000 நோட்டுகளாக டெபாசிட் செய்யப்படும் கணக்கு காட்டாத பணத்துக்கு 50 சதவிகித வரி விதிக்க மத்திய அரசு முடிவு செய்தது. இதற்காக வருமான வரிச் சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டு மக்களவையில் நவம்பர் 28-ம் தேதி நிதியமைச்சர் அருண்ஜேட்லி தாக்கல் செய்தார். இந்நிலையில் நேற்று(16/12/2016) வருமான வரி சட்டத்திருத்த மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்துள்ளார். கருப்புப் பணத்தை வெள்ளையாக மாற்ற முயற்சி செய்வோரை வருமான வரித் துறையினர் கண்டுபிடித்தால் அவர்களுக்கு அபராதம் உட்பட 85 சதவிகிதம் வரி விதிக்க இந்த மசோதா வகை செய்கிறது. அதேநேரம், கருப்புப் பணம் வைத்திருப்போர் வங்கியில் டெபாசிட் செய்துவிட்டு தாமாக முன்வந்து டிசம்பர் 30-க்குள் தகவல் தெரிவித்தால் அவர்களுக்கு அபராதம் உட்பட 50 சதவிகித வரி விதிக்கப்படும். மீதம் உள்ள 50 சதவிகித தொகையில் 25 சதவிகிதத்தை உடனடியாக எடுத்துக் கொள்ளலாம். மீதம் உள்ள 25 சதவிகிதத்தை 4 ஆண்டுகளுக்கு வெளியில் எடுக்க முடியாது. இந்த காலத்துக்கு வட்டியும் வழங்கப்படமாட்டாது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:
Write comments