பண ஒழிப்பு நடவடிக்கையை 1971ஆம் ஆண்டிலேயே மேற்கொண்டிருக்க வேண்டும். ஆனால், அதை செய்யத் தவறிவிட்டது காங்கிரஸ் கட்சி என்று, பிரதமர் மோடி குற்றம்சாட்டியிருக்கிறார். நேற்று(16/12/2016) பாரதிய ஜனதா கட்சியின் நாடாளுமன்றக் குழு கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் பேசும்போது, ‘பண ஒழிப்பு நடவடிக்கையை 1971ஆம் ஆண்டிலேயே மேற்கொண்டிருக்க வேண்டும். அப்படிச் செய்யாததால் நமது நாடு பெரும் இழப்பைச் சந்தித்துவிட்டது. காங்கிரஸ் மற்றும் பிற எதிர்க்கட்சிகள் இந்த பண ஒழிப்பு நடவடிக்கையை தொடர்ந்து எதிர்த்து வருகின்றன. கருப்புப் பணத்தை இந்தியாவிலிருந்து முழுவதுமாக களையெடுக்க வேண்டும். இந்திராகாந்தி பிரதமராக இருந்த காலத்தில் அமைச்சர்களும் அதிகாரிகளும் பண ஒழிப்பு நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு அவரை வலியுறுத்தியதாகவும் ஆனால், இந்தத் திட்டத்தை அவர் மறுத்துவிட்டதாகவும் ஆதாரங்கள் வெளியாகியுள்ளன. அப்போதே இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தால் இன்றைய சூழ்நிலை இந்தியாவில் நிலவியிருக்காது. காங்கிரஸ் இந்த நாட்டுக்கு எதிரான கட்சியாக உள்ளது. ஆனால், பாரதிய ஜனதாவைப் பொறுத்தவரையில் நாட்டுக்கே முதலிடம். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தங்கள் கொள்கைகளை மறந்து இன்று காங்கிரஸ் கட்சியுடன் சேர்ந்துகொண்டு பண ஒழிப்பு நடவடிக்கையை எதிர்க்கிறது. ஆனால், மூத்த அரசியல்வாதி ஜோதிபாசு (மார்க்சிஸ்ட்) ‘கருப்புப் பணத்தில்தான் இந்திரா காந்தி வாழ்ந்தார்’ என்று கூறியதை நினைவில்கொள்ள வேண்டும்’ என்றார்.

No comments:
Write comments