தமிழகத்தில் காஸ் சிலிண்டர் வாங்குவதற்கு ஸ்வைப்பிங் மெஷின் பயன்படுத்தும் முறை ஜனவரி 1ஆம் தேதி முதல் அறிமுகப்படுத்தப்படவிருக்கிறது.
மத்திய அரசு, கடந்த நவம்பர் 8ஆம் தேதி பழைய ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகளை செல்லாது என்று அறிவித்தது. மேலும் மக்கள் கூடுமானவரையில் மின்னணு முறையைப் பயன்படுத்துமாறு அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. மொபைல் கட்டணம், மின் கட்டணம், பெட்ரோல் உள்ளிட்ட அனைத்து சேவைகளையும் மின்னணு முறையை உபயோகிக்க அரசு வலியுறுத்துகிறது.
இந்நிலையில், மக்களின் அத்தியாவசிய உபயோகப் பொருளான சமையல் காஸ் சிலிண்டர் பெறுவதற்கான தொகையை மின்னணு முறையில் செலுத்தும் திட்டம் வரவிருக்கிறது. இதுபற்றி காஸ் சிலிண்டர் விநியோக நிறுவனமான இண்டேன் காஸ் நிறுவன அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘வருகிற ஜனவரி மாதம் 1ஆம் தேதி முதல் காஸ் சிலிண்டர்கள் எடுத்துவரும் ஊழியர்கள் தங்களுடனேயே ஸ்வைப்பிங் மெஷின்களைக் கொண்டு வருவார்கள். அதில், காஸ் சிலிண்டர்களுக்குரிய தொகையை மக்கள் மின்னணு முறையில் செலுத்தலாம். இதனால் சில்லறை பிரச்னை தவிர்க்கப்படுவதோடு, மின்னணு பரிவர்த்தனை முறையும் அதிகரிக்கும். இந்த ஸ்வைப்பிங் மெஷின்களைப் பெறுவதற்கான ஆர்டர்கள் வங்கிகளிடம் கொடுக்கப்பட்டுள்ளது’ என்று கூறினார்.

No comments:
Write comments