முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் தமிழக அரசியலில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளதாகவும், அந்த வெற்றிடத்தை பாஜக நிரப்பும் என்றும் கூறிவருகிறது பாஜக. தமிழகத்தில் அப்படியொரு வெற்றிடம் ஏற்பட்டிருக்கிறது என்பதை பாஜகவைத் தவிர வேறு எவரும் கூறவில்லை. மிக வலுவான கட்சிகளாக தமிழகத்தில் திமுக, அதிமுக இருக்கின்றன.ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் சசிகலா அதிமுகவின் பொதுச் செயலாளராக ஆகியிருக்கிறார். அதே போல, உடல் நலக்குறைவால் திமுக தலைவர் கருணாநிதி வீட்டில் ஓய்வெடுக்கும் நிலையில் திமுகவின் செயல் தலைவர் ஆகியிருக்கிறார் மு.க.ஸ்டாலின். இரண்டு கட்சிகளுமே தமிழக மக்களின் ஆதரவைப் பெற்ற வலுவான கட்சிகளாக உள்ள நிலையில், வெற்றிடம் ஏற்பட்டுள்ளதாக அடிக்கடி கூறி வருகிறது பாஜக. இதே கருத்தை இந்தியா டுடே கலந்துரையாடலில் பங்கேற்ற மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடுவும் கூறியுள்ளார்.
ஒரு வேளை அப்படியே வெற்றிடம் இருந்தாலும் கூட அதை நிரப்பும் இடத்தில் பாஜக இருக்கிறதா என்பதே கேள்விக்குறிதான்.தமிழக வாக்கு வங்கி அரசியலில் அனைத்துத் தொகுதிகளிலும் செல்வாக்கில்லாத பாஜக குமரி மாவட்டம் பகுதியில் மட்டும் வாக்குகள் பிரிந்தால் வெற்றி பெரும் நிலையில் உள்ளது. இதுதான் தேர்தல் அரசியலில் பாஜகவின் நிலை, இது போக, நவம்பர் 8-ஆம் தேதி பணமதிப்பிழப்பு நடவடிக்கையை மோடி அறிவித்த பின்னர் நாடு முழுக்க மக்களிடம் ஏற்பட்ட அதிருப்தியும் துயரமும் இன்னும் தீரவில்லை. பெரும்பாலான ஏ.டி.எம். கள் இன்னும் மூடியே கிடக்கின்றன. பணம் இருக்கும் ஏ.டி.எம் களைத் தேடி மக்கள் அலைந்து கொண்டிருக்கும் நிலையில், வங்கிகளில் பணப்பரிவர்த்தனை இன்னும் சுமூகமாகவில்லை. கருப்புப் பணத்தை ஒழிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை என்று சொல்லி புழக்கத்தில் இருந்த நோட்டுகளை செல்லாது என அறிவித்த மோடி பின்னர் மின்னணு பணப்பரிவர்த்தனை என்றார். ஆனால் அந்த மின்னணு பரிவர்த்தனைக்கு சிறு வணிகர்கள் மாற இன்னும் பல மாதங்கள் ஆகும் நிலையில் தொழில்கள் கடும் பாதிப்புக்குள்ளாகியிருக்கின்றன.
தமிழகத்தில் நிலவும் வறட்சி காரணமாக பல விவசாயிகள் மரணமடைந்திருக்கும் நிலையில், காவிரி பாசனத்திற்கு தமிழகத்திற்கு தண்ணீர் விட மறுத்த கர்நாடக மாநிலத்தைப் போல மத்திய அரசும் நடந்து கொண்டது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க முடியாது என்று அறிவித்தது. இதுவும் பாஜக மீது பெரும் அதிருப்தி ஏற்பட காரணமானது.இப்போது ஜல்லிக்கட்டுக்கு நீதிமன்றம் விதித்த தடையை நீக்க மத்திய அரசு எந்த ஒரு முயற்சியும் எடுக்கவில்லை என்ற அதிருப்தியில் பாஜகவுக்கு எதிராக போராட்டங்கள் திரும்பியுள்ளன. இப்போது பொங்கல் விடுமுறை நாளை தேசிய விடுமுறை தின பட்டியலில் இருந்து நீக்கி விட்டு மகாசிவராத்திரியை விடுமுறை தினத்தில் சேர்த்திருப்பதன் மூலம் எரிகிற கொள்ளியில் எண்ணைய் ஊற்றியிருக்கிறது பாஜக.பண மதிப்பிழப்பு நடவடிக்கை துவங்கி பொங்கல் வரை மத்தியில் ஆளும் பாஜக அரசு மீது அதிருப்தி நிலவும் நிலையில், தமிழகத்தில் ஏற்படாத ஒரு வெற்றிடத்தை எப்படி பாஜக நிரப்பப் போகிறது என்பதுதான் பலருக்கும் புரியாத புதிராக இருக்கிறது.

No comments:
Write comments