ஜல்லிக்கட்டு தொடர்பாக அவசர சட்டத் திருத்தம் நாளைக்குள் வந்துவிடும் என மாநில அரசு அறிவித்துவிட்ட நிலையில், அதில் சமாதானம் அடையாத மக்கள் இன்று அதிக எழுச்சியுடன் போராட்டங்களைத் தொடர்கின்றனர்.தமிழகம் முழுக்க பேருந்து, ரயில் சேவைகள் முழுமையாக பாதிக்கப்படும் அளவுக்கு எங்கு பார்த்தாலும் போராட்டங்களும் ஆர்ப்பட்டங்களும் ஊர்வலங்களும் நடக்கின்றன. போராடும் மாணவ, மாணவியர்களுக்கு ஆதரவாக பொதுமக்கள், பெண்கள், முதியவர்கள், வியாபாரிகள், தொழிலாளிகள், ஆட்டோ, டாக்ஸி, லாரி, பஸ் டிரைவர்கள், வக்கீல்கள், போலீஸ்காரர்கள் என பலதரப்பினரும் ஆதரவு தெரிவித்து வருவதால், ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு அவசரச் சட்டம் அதுவும் நிரந்தரமான சட்டம் அவசியம் தேவை என வலியுறுத்தி, லட்சக்கணக்கானோர் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம், போராட்டம், மனிதச் சங்கிலி நடைபெற்று வருகிறது.
பாளையங்கோட்டை
திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டையில் கல்லூரி மாணவர்கள், மாணவிகளின் போராட்டம் 3வது நாளாக நீடித்து வருகிறது. தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரில் வ.உ.சி. திடலில் நடத்த போராட்டத்தில் சிலம்பம் சுற்றி பாரம்பரியத்தை பறைசாற்றினர். திருச்செந்தூரில் தர்ணாவில் ஈடுபட்டுள்ள மாணவர்கள், வெளிநாட்டு குளிர்பானங்களான பெப்சி, கோகோ கோலா பாட்டில்களை உடைத்தும், பாடை கட்டி ஒப்பாரிவைத்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சோழவந்தான், தேனூர்
ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்கக்கோரியும், பீட்டா அமைப்பை தடைசெய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தியும் மதுரை மாவட்டத்தில் உள்ள முடுவார்பட்டி, தேவசேரி, சோழவந்தான், தேனூர், கருப்பட்டி உள்பட பல்வேறு கிராமங்களில் பொதுமக்கள் மாணவர்களுடன் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். உசிலம்பட்டியில் போராட்டத்தில் ஈடுபட்ட பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கல்லூரி மாணவர்கள் தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
மதுரை
ஜல்லிக்கட்டை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும், பீட்டா அமைப்பை தடை செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி இன்று 4வது நாளாக மதுரையில் மாணவர்கள் தொடர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பொதுமக்களே உணவு தயாரிக்கத் தேவையான மளிகைப் பொருட்களை தானாக முன்வந்து அளிக்கின்றனர்.
தேனி
தேனி புதிய பேருந்து நிலையம் முன்பு திரண்ட பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள், மாணவிகள் பீட்டா அமைப்பை தடை செய்ய வேண்டும். ‘ஜல்லிக்கட்டு வா வா, பீட்டா போ போ’ என முழக்கங்களை எழுப்பி, பதாகைகளும் வைத்திருந்தனர்.
திருச்சி
திருச்சி மாவட்டம், துவாக்குடியில் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள், மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். திருச்சி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அருகே விவசாயிகள், வணிகர்கள், மாணவர்கள், வழக்கறிஞர்கள் என பல்வேறு தரப்பினர் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், திருச்சி மாநகரம் திணறியது.
ஆவுடையார் கோவில்
புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில், அறந்தாங்கி போன்ற இடங்களில் பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள், மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டு ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டத்தில் ஈடுபட்டனர். பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே மாணவர்கள் திரண்டு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நாகப்பட்டினம்
நாகப்பட்டினம் தலைமை தபால் நிலையம் முன்பு, பீட்டா அமைப்பை தடை செய்ய வலியுறுத்தி பள்ளி, கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சேலம்
சேலம் டவுன் ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதேபோல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இரண்டாவது நாளாக அரசு மற்றும் தனியார் கல்லூரி மாணவர்கள், தன்னார்வலர்கள், மாணவர்களின் பெற்றோர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர்
திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன்பாக 2வது நாளாக பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள், மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கரூர் அருகே வெள்ளையனை கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள், ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளிக்கக்கோரி காளை மாடுகளுடன் போராட்டம் நடத்தினர்.
பெருந்துறை
ஈரோடு மாவட்டம், பெருந்துறையில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் சார்பாக பேரணி நடைபெற்றது. பேரணியில் பலர் காங்கேயம் காளைகளுடன் கலந்து கொண்டனர். பீட்டா அமைப்புக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.
கோபிசெட்டிபாளையம்
கோபிசெட்டிபாளையத்தில் வணிகர்கள் கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மார்க்கெட் பகுதியில் இருந்து ஈரோடு சாலையில் உள்ள பெரியார் சிலை வரை ஊர்வலம் நடத்தினர்.
காஞ்சிபுரம்
காஞ்சிபுரம் மாவட்டத்தில், செங்கல்பட்டு, மேல்மருவத்தூர் ஆகிய பகுதிகளில் 2௦௦-க்கும் மேற்பட்ட வாலிபர்கள் மின்சார ரயிலை நிறுத்தி மறியல் போராட்டம் செய்தனர்.
விழுப்புரம்
விழுப்புரம் மாவட்டத்தில் சின்னசேலம் பகுதியில், 1௦௦-க்கும் மேற்பட்ட கிராம பொதுமக்கள், இளைஞர்கள் அந்நிய நட்டு குளிர்பானங்களை தரையில் ஊற்றி ஆர்ப்பாட்டம் செய்தனர். உளுந்தூர்பேட்டையில், சுமார் 7 வாலிபர்கள் அங்கிருந்த செல்போன் டவரில் ஏறி ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் செய்தனர்.
கள்ளக்குறிச்சியில் இன்று 3-வது நாளாக தொடர்ந்து போராட்டம் நடைபெற்றது. போராட்டக்காரர்கள் எல்.ஐ.சி.அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
No comments:
Write comments