ஒரு கிலோ தக்காளி 45 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டையில் ஓசூர் சாலையில் தினசரி தக்காளி மார்க்கெட் செயல்படுகிறது.
இங்கு ராயக்கோட்டை அதனை சுற்றியுள்ள கெலமங்கலம், தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி, உத்தனப்பள்ளி, பஞ்சபள்ளி உள்பட பல்வேறு கிராமப்புற பகுதிகளில் இருந்து தக்காளி ஏலத்திற்கு கொண்டு வரப்படுகிறது.
ஆந்திரா, கர்நாடகாவைச் சேர்ந்த வியாபாரிகள் தக்காளியை வாங்கிச்செல்கின்றனர். கடந்த மாதத்தில் ஒரு கிலோ ரூ. 5க்கு விற்பனை செய்யப்பட்டது. கடந்த சில வாரங்களாக கொளுத்திய கோடை வெயில் காரணமாக செடிகள் கருகி உள்ளதால் தக்காளி வரத்து குறைந்துள்ளது. இதன் காரணமாகவும் கல்யாண சீசன் தொடங்கிவிட்ட காரணத்தாலும் தக்காளி விலை அதிகரித்துள்ளது. 25 கிலோ எடை கொண்ட ஒரு பெட்டி ரூ. 1100 க்கும், சில்லரையாக ஒரு கிலோ தக்காளி ரூ. 45 க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், “கடந்த மாதம் அடித்த கடும் வெயிலால் தக்காளி சுருங்கியும், கருகியும் போனது. இதனால் மார்க்கெட்டுக்கு வந்த தக்காளி தரமில்லாமல் இருந்ததால் குறைவாக விலை போனது. தற்போது விளைச்சல் குறைந்துள்ளது. கல்யாண சீசன் என்பதால் தேவையும் அதிகரித்துள்ளது. இதனால் வெளிமாநில வியாபாரிகள் வருகை அதிகரித்து, தக்காளி விலையும் அதிகரித்துள்ளது’ என்றனர்.
செய்தி :: சாஹிப்...

No comments:
Write comments