கருப்பு பண விவகாரத்தில் நான் கூறிய கருத்தால் எனக்கும் மோடிக்கும் இடையே எந்த வித மனஸ்தாபமும் இல்லை என பாபா ராம்தேவ் கூறியுள்ளார்.
2014 நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது, பா.ஜ.க ஆட்சிக்கு வந்தால் ஒரு வருடத்திற்கு வெளிநாடுகளில் பதுக்கிவைக்கப்பட்டிருக்கும் கருப்பு பணங்களை மீட்டு ஒவ்வொரு இந்தியருடைய வங்கி கணக்கிலும் லட்ச ரூபாய் போடப்படும் என்று நரேந்திர மோடி பிரச்சாரம் செய்திருந்தார். ஆனால் இது வரை கருப்புப்பணமும் மீட்கப்படவுமில்லை, வங்கிக்கணக்கில் போடப்படவும் இல்லை என எதிர் கட்சிகள் விமர்சித்து வருகின்றனர்.
வெளிநாடுகளில் பதுக்கிவைக்கப்பட்டிருக்கும் கருப்பு பணங்களை மீட்க வேண்டுமென பாபா ராம்தேவ் பல ஆண்டுகளாக கூறி வருகிறார். கருப்பு பணத்தை மத்திய அரசால் மீட்கமுடியவில்லை என்று கூறியிருந்தார், இதனால் அவருக்கும் பிரதமர் மோடிக்கு கருத்துவேறுபாடு ஏற்பட்டதாக கூறப்பட்டது. இது தொடர்பாக பாபா ராம்தேவ் பத்திரிகையாளர்களிடத்தில் கூறும்போது "மத்திய அரசால் கருப்பு பணத்தை மீட்க முடியவில்லை, இதனால் மக்கள் மத்தியில் பிரதமர் மோடிமீதான விரக்தி ஏற்பட்டுள்ளது. நான் எங்கு சென்றாலும் மக்கள் என்னை பார்த்து கருப்பு பணம் மீட்கப்பட்டுவிட்டதா? என்று கேட்கின்றனர். நானும் இன்னும் மீட்கப்படவில்லை என்றே கூறிவருகிறேன். இதனால் மக்கள் மத்தியில் மோடி மீதான் விரக்தி ஏற்பட்டுவிடும் என்று கூறினேன், இதனால் எனக்கும் மோடிக்கும் மனஸ்தாபம் ஏற்பட்டுவிட்டதாக சிலர் கூறுகின்றனர். அப்படி ஒன்றும் எங்களுக்குள் எந்த பிரச்சனையும் இல்லை. 80% கருப்பு பணம் இந்தியாவினுள் தான் இருக்கிறது. 20% தான் வெளிநாடுகளில் இருக்கிறது. கருப்பு பணம் தொடர்பான எனது கருத்துக்களை பா.ஜ.க தலைவர்களிடத்தில் கூறிக்கொண்டுதான்வ் வருகிறேன். எனக்கும் மோடிக்கும் எந்த பிரச்சனையும் இல்லை, மோடி ஒரு சிறந்த பிரதமர், அவரிடமிருந்து தனிப்பட்ட முறையில் நான் எதையும் எதிர்பார்க்கவில்லை" இவ்வாறு பாபா ராம்தேவ் கூறினார்.

No comments:
Write comments