தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே ஆடுதுறை பஜாரில் முதல்வர் ஜெயலலிதாவை வாழ்த்தும் வகையில் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவரால வைக்கப்பட்ட பிளக்ஸ் பேனரால் பெரும் சர்ச்சை எழுந்துள்ளது.
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை காவல்நிலையத்தில் துணை ஆய்வாளராக பணி புரிந்து வருபவர் ரவி. 1994 முதல் காவல்துறையில் பணி புரிந்து வரும் இவர் தற்போது பதவி உயர்வுக்காக காத்துக்கொண்டிருக்கிறார். இவரது புகைப்படம் போட்டு காவல்துறை சீருடை அணிந்த நிலையில் கும்பகோணம் அருகே ஒரு பிளக்ஸ் போர்டு வைக்கப்பட்டிருந்தது. அதில் "தமிழக முதல்வர் அவர்களே உங்களது பொற்கால ஆட்சியில் பணிபுரிவதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்" என்று அதில் எழுதப்பட்டிருந்தது. ஒரு காவல்துறை அதிகாரியால் இவ்வாறு பேனர் வைக்கப்பட்டது அப்பகுதி மக்களிடையே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக ரவியை தொடர்புகொண்டு கேட்டபோது அதை தான் வைக்கவில்லை என்றும், தனது நண்பர்களே அவ்வாறு வைத்துள்ளனர் என்றும் தெரிவித்தார். " நான் அதில் தவறாக எதுவும் எழுதவில்லை, இதற்கு முன்னர் கருணாநிதி முதலமைச்சராக பதவி ஏற்றபோதும் பிளக்ஸ் வைத்திருக்கிறேன்" என்று கூறினார்.
சட்டப்பஞ்சாயத்து இயக்கத்தின் தலைவர் இளங்கோ இது தொடர்பாக புகார் அளித்துவிட்டு கூறும்போது "ஒரு காவல்துறை அதிகாரி எந்த கட்சி சார்பும் இன்றி நடுநிலையாக நடந்து கொள்ள வேண்டும். இவர் இப்படி அதிமுகவுக்கு ஆதரவாக பிளக்ஸ் வைத்தால், நாளை அக்கட்சியின் நிர்வாகிகளோ அல்லது தொண்டர்களோ தவறு செய்யும் போது அதனை கண்டும் காணாமல் போல் இருந்துவிடுவார். ஒரு காவல்துறை அதிகாரி அரசாங்கத்திற்கு கட்டுப்பட்டு நடக்கனுமே அல்லாது தனிப்பட்ட அரசியல்வாதிகளுக்காக இருக்கக்கூடாது" என்று தெரிவித்தார்.

No comments:
Write comments