2016 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் தனது வாக்குரிமையை நிறைவேற்ற முடியாதது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் நடிகர் சூர்யா. அவருடைய அறிக்கை பின்வருமாறு:-
"24" படத்திற்கு அனைவரிடமிருந்து கிடைத்திருக்கும் வரவேற்புக்கும், ஆதரவுக்கும் என் மனப்பூர்வமான நன்றி. நன்றி தெரிவிக்கும் இந்த நேரத்தில், மக்களிடம் என்னுடைய மன்னிப்பையும் நான் தெரிவித்துக்கொள்கிறேன். முதல் முறையாக என்னுடைய வாக்குரிமையை நிறைவேற்ற இயலாத சூழ்நிலையில் இருக்கிறேன். அது எனக்கு குற்றவுணர்ச்சியையும் வருத்தத்தையும் அளிக்கிறது. அதற்காக அனைவரிடமும் மனபூர்வமாக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.
வாக்களிக்கும் உரிமையை, கடமையை அனைவரும் நிச்சயம் நிறைவேற்றவேண்டும் என்ற எண்ணம் உடையவன் நான். இதுவரை ஒரு தேர்தலிலும் என்னுடைய வாக்குரிமையை செலுத்தாமல் நான் இருந்தது இல்லை. இந்த முறை வெளிநாட்டிலிருந்து தேர்தலுக்கு முதல் நாளே சென்னைக்கு வந்துவிட வேண்டுமென்று பயண திட்டம் வகுத்திருந்தேன். ஆனால், நானே எதிர்பார்க்காத சூழல், என் பயணத்தைத் திட்டமிட்டபடி மேற்கொள்ள இயலவில்லை.
என் சூழ்நிலையை விளக்கி, அஞ்சல் மூலம், இணையம் மூலம் வாக்களிக்க முடியுமா என அனைத்து முயற்சியையும் மேற்கொண்டேன். சட்டப்பூர்வமான வழிகள் ஏதும் இல்லை. இன்று தமிழக சட்டமன்ற தேர்தலில் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்று மக்களிடம் வேண்டுகோள் வைத்திருந்தேன். அனைவரையும் வாக்களிக்கும்படி வலியுறுத்திவிட்டு, என்னால் செய்ய முடியாமல் போனதிற்காக, அனைவரிடமும் மீண்டும் ஒருமுறை மனப்பூர்வமான மன்னிப்பை கேட்டுக்கொள்கிறேன்.
என் மீது அன்பு கொண்ட அனைவரும், என்னை புரிந்து கொள்ளவும், பொறுத்துக்கொள்ளவும் வேண்டுமென பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன் என்று தன் அறிக்கையில் குறிப்பிட்டு இருந்தார்.
செய்தி :: சாஹிப்...
No comments:
Write comments