இந்தியாவில் இன்று சுதந்திர தினம் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இன்றோடு நாம் சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகள் ஆகின்றன.
ஆனால், நம்மில் எத்தனை பேருக்கு நம்முடைய தேசியக் கொடியில் உள்ள வண்ணங்களுக்கு அர்த்தம் தெரியும்? தேசிய கீதத்தை பாடியவர் யார்? நம்முடைய தேசியக் கொடியின் வண்ணங்கள் எதை உணர்த்துகின்ற என்பதைப் பற்றி ‘போதார் கல்வி மையம்’ என்ற அமைப்பு இளைஞர்களிடம் கேள்வி கேட்டு ஆய்வு நடத்தியது. இந்த சர்வே மூன்று நகரங்களில் நடத்தப்பட்டது. அதில் 90 சதவிகிதம் பேருக்கு தேசியக் கொடி மற்றும் தேசிய கீதம் குறித்து ஒன்றுமே தெரியவில்லை. சென்னை, மும்பை மற்றும் பெங்களூரு போன்ற பெருநகரங்களில் உள்ள 18 முதல் 23 வயது வரையுள்ள இளைஞர்களிடம் சர்வே எடுக்கப்பட்டது. இந்த ஆய்வின் முடிவில் அதிர்ச்சிதான் காத்திருந்தது. 8 முதல் 12 சதவிகித இளைஞர்களிடம் மட்டுமே இந்தக் கேள்விக்கு பதில் கிடைத்தது. பெங்களூரூவில் 12%, மும்பையில் 10%, சென்னையில் 8% பேர் மட்டுமே கொடியின் வரலாறு பற்றிய கேள்விக்குப் பதில் அளித்தனர். ஆனால், தேசிய கீதத்தை 40% குறைவான இளைஞர்கள் மட்டுமே தவறில்லாமல் முழுமையாகப் பாடுபவர்களாக உள்ளனர். மும்பையில் 42%, பெங்களூருரில் 34%, சென்னையில் 28%க்கு மட்டுமே இந்தப் பாடல் தெரிந்தது. தேசிய கீதத்தை எழுதியவர் யார்? என்ற கேள்விக்கு மும்பையில் 53%, பெங்களூருரில் 49%, சென்னையில் 38% பேர் மட்டுமே சரியான பதிலை அளித்தனர். சுதந்திரப் போராட்டத்துக்கு பெரும்பாடு பட்ட சில தியாகிகளை பற்றி கேட்கும்போது தெரியவில்லை. பகத்சிங், சுகதேவ், ராஜகுரு இவர்கள் எல்லாம் யார் என்ற கேள்விக்கு மும்பையில் 34% பேர் பதிலளித்தனர்.
அந்த அமைப்பு நடத்திய ஆய்வில் 50 சதவிகிதத்துக்கும் மேலான கேள்விகளுக்கு இளைஞர்களால் பதில் அளிக்க இயலவில்லை. தேசத்தை பற்றி அறியாமையில் இருக்கும் இளைஞர்களை நினைக்கும்போது வருத்தமாக இருக்கிறது என்று சர்வே எடுத்த அமைப்பினர் கூறினார்கள்.
கவலைபடாதீர்கள்! தேசிய கொடியின் வண்ணங்கள் எதை உணர்த்துகின்றது என்பதை நாங்கள் சொல்கிறோம். தேசியக் கொடியின் காவி நிறம் தூய்மையையும் கடவுளையும் குறிக்கிறது. வெள்ளை நிறம் அமைதியையும் உண்மையையும் குறிக்கிறது. பச்சை நிறம் செழுமையைக் குறிக்கிறது. மகாகவி ரவீந்திரநாத் தாகூர் தேசிய கீதத்தை எழுதினார். நம் தேசிய கீதத்தை 52 நொடிகளில் பாடி முடிக்க வேண்டும். மனனக் கல்வியின் எதிரொலிதான் இந்த நிலை!

No comments:
Write comments