இஸ்ரேல் மற்றும் ஹிஸ்புல்லா அமைப்பிற்கிடையேயான போரின் 10ஆம் ஆண்டு நினைவு தினம் லெபனானில் அனுஷ்டிக்கப்பட்டது. அதில் பங்கு பெற்ற ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் ஹசன் நசருல்லா கூறும்போது "இஸ்ரேலுடனான போர் முடிந்துவிட்டதாக நாங்கள் கருதவில்லை. ஆனால் இஸ்ரேல் தன்னுடைய ஆக்கிரமிப்பை இத்தோடு நிறுத்திக்கொள்ள வேண்டும். அப்படி இல்லாமல் அட்டூழியங்களை நிகழ்த்திக்கொண்டிருந்தால் அடுத்த வரும் போர் ஹிஸ்புல்லாவ்ஹிற்கும் இஸ்ரேலுக்குமிடையே நடக்கும் கடைசி யுத்தமாகும். அதன் பிறகு இஸ்ரேல் என்ற ஒரு நாடே இருக்காது" என தெரிவித்துள்ளார்.
மத்திய கிழக்கு நாடுகளில் அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஐ.எஸ் பயங்கரவாதிகளால் சின்னாபின்னமாக்கப்பட்டு அமைதி இழந்து தவித்துக்கொண்டிருக்கிறது என தெரிவித்த நசருல்லா அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் டொனால்ட் டிரம்பின் வார்த்தைகளை உலகத்தலைவர்கள் நன்கு கவனிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.
மத்திய கிழக்கு நாடுகளில் பயங்கரவாத தாக்குதல்களில் ஈடுபட்டு வரும் ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பை உருவாக்கியதே ஒபாமாவும், ஹிலாரி கிளிண்டனும் தான் என டொனால்ட் டிரம்ப் சமீபத்தில் பேசிய சர்ச்சைக்குரிய கருத்தை முன்வைத்து ஹசன் நசருல்லா இவ்வாறு தெரிவித்திருக்கிறார்.
கடந்த 2006ஆம் ஆண்டு இஸ்ரேலுக்கு எதிரான யுத்தத்தில் பங்கெடுத்த அனைவரையும் வெகுவாக பாராட்டிய நசருல்லா, தாங்கள் முன்னின்று நடத்திய அந்த யுத்தத்தில் இஸ்ரேலுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என கூறினார்.
2006ஆம் ஆண்டு நடைபெற்ற அந்த யுத்தத்தில் 1200 லெபனானியர்கள் கொல்லப்பட்டனர், பெரும்பாலும் சாதாரண மக்கள். இஸ்ரேல் தரப்பில் கொல்லப்பட்ட 160 நபர்களில் பெரும்பாலானவர்கள் இராணுவ வீரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:
Write comments