கடந்த 30 வருட வரலாற்றில் பி.டி உஷா, மல்லேஸ்வரி, அபினவ் பிந்த்ரா, என விரல் விட்டு எண்ணினாலும் மீதி விரல்கள் இருக்கும் என்ற வகையில் சொற்ப வீரர்களே சாதித்துள்ளனர். ஏன் நம்மால் ஒரு பதக்கம் வெல்வதற்கு கூட இந்த அளவிற்கு முக்க வேண்டியுள்ளது என்பதை நாம் சிந்தித்து பார்கின்றோமா? இதற்கு பல்வேறு காரணங்களை கூறலாம்.
முதலாவதாக, உலகிலேயே அதிக மக்கள் தொகை உள்ள இரண்டாவது நாடாக நமது இந்திய தேசம் திகழ்கிறது. நமக்கு முன்னால் இருப்பது சீனா மட்டுமே. ஒலிம்பிக் போட்டிகளில் பெரும்பாலும் பதக்கங்களை வென்று குவிக்கும் அனைத்து நாடுகளும் மக்கள் தொகை கணக்குப்படி நமக்கு பின்னலேயே இருக்கின்றது. அமெரிக்கா, ரஷியா, இங்கிலாந்து, இத்தாலி, ஜெர்மனி, பிரான்சு, ஜப்பான், ஆஸ்திரேலியா என ரியோ ஒலிம்பிக் பதக்க பட்டியல்களில் முன்னனியில் இருக்கும் அனைத்து நாடுகளும் மக்கள் தொகையில் நமக்கு பின்னால் தான் இருக்கின்றார்கள். அப்படியானால் இந்தியாவில் திறமை மிக்க வீரர்கள் இல்லையா? நிச்சயமாக அப்படி அல்ல,
20 கோடி மக்கள் தொகை கொண்ட பிரேசிலில் ஒரு ரொனால்டினோ இருக்கிறார் என்றால் 138 கோடி ஜனத்தொகை கொண்ட இந்தியாவில் எத்துனை ரொனால்டினோக்கள் இருந்திருக்க வேண்டும்? 32 கோடி ஜனத்தொகை கொண்ட அமெரிக்காவில் 1 மைக்கேல் பெல்ப்ஸ் என்ற நீச்சல் வீரர் இருக்கிறார் என்றால் 138 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் எத்துனை மைக்கேல் பெல்பஸ் இருந்திருக்க வேண்டும்? என்பதை நாம் சற்று சிந்தித்து பார்க்க வேண்டும். தகுதிகள், திறமைகள் என்பது ஏதோ ஒரு நாட்டு மக்களுக்கு சொந்தமானது அல்ல. திறமைகள் அனைத்து இயற்க்கையாகவே பகிர்ந்தளிக்கப்பட்டிருக்கிறது. மற்ற நாடுகள் திறமையான வீரர்களை கண்டறிந்து மெருகூட்டி நட்சத்திரங்களாக ஜொலிக்க வைத்துக்கொண்டிருக்கும்போது, நமது நாட்டில் மட்டும் தகுதிமிக்கவர்கள் ரோட்டில் வித்தைகாட்டி பிச்சை எடுத்துக்கொண்டிருக்கிறார்கள் என்பதே நிதர்சனம்.
இரண்டாவது காரணம், இந்தியாவில் கிரிக்கெட் போட்டிகளுக்கு இருக்கும் மவுசு வேறு எந்த விளையாட்டுப்போட்டிகளுக்கும் கிடையாது. கிரிக்கெட் போட்டிகளுக்கு இருக்கும் ரசிகர்களின் ஆதரவு மற்ற விளையாட்டுப்போட்டிகளுக்கு இருப்பதில்லை என பொத்தம் பொதுவாக ரசிகர்கள் மீது பழி போட்டுவிடக்கூடாது. கிரிக்கெட் வீரர்களின் ஒவ்வொரு அங்க அசைவுகளையும் செய்திகளாக்கி, அவர்களை மேலும் மேலும் பிரபலப்படுத்தி கோடீஸ்வர்களாக்கும் நாம் மற்ற விளையாட்டு வீரர்களின் திறமைகளை செய்திகளாக கூட ஆக்குவதில்லை. கிரிக்கெட் வீரர்களுக்கு கிடைக்கும் விளம்பரம் வேறு எந்த விளையாட்டு வீரர்களுக்கும் கிடைப்பதில்லை. இது போன்ற காரணங்களாலேயே கிரிக்கெட் போட்டிகளுக்கு மட்டும் அதிக மவுசு ஏற்பட்டுள்ளது என்பதை நாம் உணர வேண்டும். சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்கும் நாடுகள் மற்ற விளையாட்டுப்போட்டிகளை காட்டிலும் மிக மிக குறைவே. இதிலிருந்து மற்ற நாடுகள் கிரிக்கெட் போட்டிகளுக்கு அவ்வளவாக முக்கியத்துவம் அளிப்பதில்லை என்பதை உணர்ந்து கொள்ள முடியும்.
மூன்றாவது முக்கிய காரணம், நமது நாட்டை பொறுத்தவரை பிறப்பிலிருந்து சாவு வரை எல்லாவற்றிலும் அரசியல் புகுந்து விளையாடும். விளையாட்டுத்துறையையும் அது விட்டுவைக்கவில்லை என்பதே எதார்த்தம். திறமையான வீரர்கள் இருந்தும், சிபாரிசின் மூலமாகவே நிறை வீரர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள் என்பது நிஜம். பொத்தம்பொதுவாக எல்லா வீரர்களும் அப்படித்தான் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள் என்று சொல்லவில்லை, மாறாக சிபாரிசை வைத்து அணியில் இடம்பெறும் போக்கு இன்னமும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. அதனை அவ்வளவு எளிதில் மறுத்துவிடமுடியாது. இந்தந்த விளையாட்டு போட்டிகளில் தேசிய வீரராக தேர்வு செய்யப்பட்டு ஓரிரு போட்டிகளில் விளையாடினால் கூட போதுமானதும் நிறைய விளம்பரங்கள் மூலம் பணம் சம்பாதிக்கலாம் என்ற நிலை வரும்போது கோடிக்கணக்கில் பணத்தை லஞ்சமாக பெற்று அணிக்கு வீரரை தேர்வு செய்யும் போக்கும் நடக்கிறது. ஆனால் இதற்கான ஆதாரங்கள் இருக்கிறதா? என்று கேட்டால் நிச்சமயாக சட்டத்திற்கு தேவையான கண் சாட்சி கிடையாதே தவிர மனசாட்சியுடன் ஒவ்வொருவரும் செயல்பட்டால் நிச்சயம் சாட்சிகள் இருக்கும்.
ஆக, நம்மிடையே இருக்கும் பல்வேறு குறைகளை போக்காதவரை இன்னும் எத்துனை ஒலிம்பிக் போட்டிகள் வந்தாலும் பதக்கம் வெல்ல முக்கிக்கொண்டே இருப்போம்.
- முத்து

Absolutely ur right brother
ReplyDelete