கோவையின் இந்து முன்னனி பிரமுகர் கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளிகளுக்கு பாகிஸ்தான் தீவிரவாதிகளுடன் தொடர்பு ஏதும் உள்ளதா? என்கிற கோணத்தில் போலீஸார் விசாரணை மேற்கொள்ள வேண்டுமென மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
கடந்த செப்டம்பர் 22ஆம் தேதி கோவையின் இந்து முன்னனி மாநில செய்தி தொடர்பாளர் சசிகுமார் மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து அவருடைய இறுதி ஊர்வலத்தில் வன்முறை வெடித்தது. இதில் ஏராளமான கடைகள், தொழிற் நிறுவனங்கள் தாக்குதலுக்குள்ளானது. இந்நிலையில் சசிகுமாரின் குடும்பத்தினர்களை நேரில் சந்தித்து மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ஆறுதல் கூறினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது,
கஷ்மீரில் உரி இராணுவதலைமையகத்தின் மீது பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய சில தினங்களில் கோவையில் இந்து முன்னனி பிரமுகர் கொல்லப்பட்டிருப்பது வலுவான சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. சசிகுமாரை கொன்றவர்களுக்கும் பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கும் தொடர்பு இருக்கும் என்றே கருதுகிறேன். எனவே காவல்துறையினர் இந்த கோணத்திலும் விசாரணை நடத்த வேண்டும்.
இந்து இயக்கத்தலைவர்கள் மீதான தாக்குதல் தமிழகத்தில் கடந்த 1989 ஆம் ஆண்டிலிருந்தே நடைபெற்று வருகிறது. 1998ல் கோவைக்கு பா.ஜ.க தலைவர் அத்வானி வந்த போது அவரை கொல்ல முயற்சி நடந்தது. அப்போது ஏற்பட்ட குண்டுவெடிப்பு அதனை தொடர்ந்த கலவரத்தில் 58 பேர் கொல்லப்பட்டனர் என்பதை மறந்துவிடக்கூடாது. சசிகுமாரின் இறுதி ஊர்வலம் அமைதியாகவே நடந்து கொண்டிருந்தது. ஒரு வழிபாட்டுத்தலம் அருகே சென்றபோது யாரோ ஒருவர் கல்வீசியதன் விளைவாகவே வன்முறை ஏற்பட்டிருக்கிறது. சசிகுமாருக்கு பாதுகாப்பு வழங்குவதில் தவறிழைத்துவிட்டனர். தன்னுடைய உயிருக்கு அச்சுறுத்தல் இருக்கிறது என்பதை காவல்துறையினரிடம் ஏற்கனவே முறையிட்டு பாதுகாப்பு கோரியிருக்கிறார். ஆனால் காவல்துறையினர் அதனை சாதாரணமாக எடுத்துகொண்டனர்.
ஓசூர் மற்றும் திண்டுக்கல் ஆகிய பகுதிகளிலும் இந்து இயக்க தலைவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. இவ்வாறு அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
இருப்பினும் தமிழக காவல்துறை மீது தங்களுக்கு நம்பிக்கை இருப்பதாகவும், விரைவில் குற்றவாளிகளை பிடித்து தக்க தண்டனை வழங்குவார்கள் என தெரிவித்தார்.

No comments:
Write comments