பாஜக தொண்டர் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து நேற்று கேரளாவில் நடத்தபட்ட ‘பந்த்’ கேரளாவில் பெரும் பதற்றத்தை உருவாக்கிய நிலையில் கேரள முதல்வர் பினராயி விஜயன் ஆர்.எஸ்.எஸ். அமைப்பை கடுமையாக சாடியுள்ளார். கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில் இடதுசாரி ஜனநாயக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநில முதல்வர் பினராயி விஜயனின் சொந்த ஊரான பினராயியில் பாஜக தொடர் ரெமித் படுகொலை செய்யப்பட்டார். இதற்கு பின்னணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளது என்று கூறிய ஆர்.எஸ்.எஸ். மற்றும் பாஜக-வினர் அக்கட்சியின் கொலைகார அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று கூறினர். இதனைத் தொடர்ந்து ரெமித் படுகொலை செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து நேற்று கேரளாவில் பந்த் நடத்த ஆர்.எஸ்.எஸ். மற்றும் பாஜக சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டது. அதன்படி தமிழக கேரள எல்லைகளான நாகர்கோவில், கோவை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கேரளா செல்லும் பேருந்துகள் நிறுத்தப்பட்டன. மருத்துவம், பால் விநியோகம், ஊடக சேவை உள்ளிட்டவை மட்டும் ‘பந்தி’லிருந்து விலக்கி வைக்கப்பட்டன. நேற்று நடைபெறவிருந்த பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டன. சில மாதங்கள் முன்பு ஆர்.எஸ்.எஸ்., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளுக்கு இடையே நடந்த மோதலால் பலியான மார்க்சிஸ்ட் கட்சியின் சிபு என்பவரது குடும்பத்துக்கு புதிய வீடு கட்டி கொடுத்து வீட்டின் சாவியை குடும்பத்தாரிடம் கொடுத்த பினராயி விஜயன் பிறகு பேசியதாவது, “ஆர்.எஸ்.எஸ்ஸும், பாஜக-வும் கேரளாவின் அமைதியை சீர்குலைக்க நினைக்கின்றன. நம் பண்பாட்டை நாசமாக நினைக்கும் அவர்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை குறி வைத்து தாக்குகிறார்கள். இதற்கு மத்திய தலைமையும் ஆதரவளித்து வருகிறது. போதைப்பொருள் மயக்கத்தைவிட , இந்த இன துவேஷ எண்ணம் மிகவும் மோசமானது. அவர்கள் அந்த விஷ போதையை இளைஞர்களுக்கு அளித்து தவறான பாதையில் வழி நடத்துகிறார்கள். அவர்களின் சதியை முறியடிக்க மதசார்பற்ற முற்போக்காளர்கள் ஓரணியில் திரள வேண்டும்” என்று கூறினார்.

No comments:
Write comments