நீரிழிவு, இதயநோய்கள் போன்றவற்றைக் கட்டுப்பாடாக வைக்கவும், பின்விளைவுகளைக் குறைக்கவும் உதவக்கூடிய ஏராளமான மருந்துகள் இப்போது கிடைக்கின்றன. மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற வேண்டிய தேவையையும் இம்மருந்துகளே குறைக்கின்றன.வாழ்க்கை முழுக்கவே சிகிச்சை பெற வேண்டிய ஒரு குறைபாடாகவே நீரிழிவு உள்ளது. சில நீரிழிவாளர்களுக்கு உணவுக்கட்டுப்பாடும் முறையான உடற்பயிற்சியும் மட்டுமே போதுமானதாக இருக்கிறது.
ஆனால், பலருக்கு மருந்துகள் இல்லாமல் நீரிழிவைக் கட்டுப்படுத்த முடியாத நிலையே நிலவுகிறது. இந்த மருந்துகள் பற்றி நாம் அறிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள் என்னென்ன? டாக்டரிடம் தயக்கமில்லாமல் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.
மருத்துவர் அளிக்கிற ப்ரிஸ்க்ரிப்ஷனை அப்படியே மருந்துக்கடையில் கொடுத்து மாத்திரைகள் வாங்கி கண்ணை மூடிக்கொண்டு விழுங்க வேண்டிய அவசியமில்லை. மருத்துவரிடம் நாம் எடுத்துக்கொள்ளும் மருந்துகள் பற்றி விளக்கமாகக் கேட்டு தெளிவடைய வேண்டியது அவசியம். நீரிழிவுக்காக அளிக்கப்படும் மருந்துகளைத் தவறாது எடுத்துக்கொண்டாலே பல பிரச்னைகளைத் தவிர்த்து விட முடியும்.*நீரிழிவு நிர்வாகத்தை முழுமையாகக் கடைப்பிடிக்க வேண்டும்.
முறையான உணவு, உடற்பயிற்சி, குறிப்பிட்ட கால இடைவெளிகளில் ரத்த குளுக்கோஸ் சோதனை போன்றவற்றோடு, மருந்துகளும் எடுத்துக்கொள்ளப்படும்போது நீரிழிவு கட்டுப்பாடு நல்ல நிலையை அடைகிறது.நீரிழிவு என்பது ஒருமுறை பெட்ரோல் நிரப்பி வண்டியை இயக்கி, பின்னர் நிறுத்தி விடுவதுபோல அல்ல.
வண்டி ஒழுங்காக ஓடுகிறதா, எரிபொருள், காற்று போன்றவை போதுமான அளவு இருக்கிறதா, அவ்வப்போது சர்வீஸ் செய்யப்படுகிறதா என்று தினமும் கண்காணித்தால்தான் பயணம் இனிதாகும். இதுபோலவே நீரிழிவுப் பயணமும் தொடர்ச்சியான கவனத்துக்கு உட்பட்டதே!மருத்துவர் சொல்லைத் தட்டாதே!
‘நலமாகத்தானே இருக்கிறோம்... நமக்கு எதற்கு இவ்வளவு மருந்து மாத்திரைகள்...’ என நினைத்து ப்ரிஸ்கிரிப்ஷனை கடைப் பிடிக்காமல் இருப்பது மிகுந்த அபாயத்தை அளித்துவிடக் கூடும். ஆகவே, கவனம்!மாற்று மருத்துவ மருந்துகளை அலோபதி மருந்துகளோடு உட்கொள்ளும் எண்ணம் இருந்தால், அதையும் மருத்துவரிடம் ஆலோசித்த பிறகே பின்பற்றுங்கள். சிலருக்கு இப்படி கலப்பு மருந்து சாப்பிடும்போது பிரச்னைகள் ஏற்படலாம்.
மருந்து எடுத்துக்கொள்ளுதல், உணவுப்பழக்கம், உடற்பயிற்சி போன்றவற்றை நம் அன்றாடச் செயல்கள் போலவே வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். இதை எக்ஸ்ட்ரா விஷயமாகவோ, சுமையாகவோ கருத வேண்டாம்.
மருந்துகளை ஒவ்வொரு நாளும் குறிப்பிட்ட நேரத்தில் உட்கொண்டு, அதற்கேற்ப உணவும் முறையாகச் சாப்பிட்டு, உடற்பயிற்சியும் செய்துவந்தால், மருந்து வேலை செய்யும் திறன் சிறப்பாக இருக்கும்.
மருத்துவர் சந்திப்பு அவசியம்சிலபல மாதங்களுக்குப் பிறகோ, ஆண்டுகளுக்குப் பிறகோ, சிலருக்கு நீரிழிவு மருந்துகளின் செயல்திறன் குறையக்கூடும். அதனால் குறிப்பிட்ட கால இடைவெளிகளில் மருத்துவரைச் சந்திப்பது அவசியமாகிறது. அப்போதைய சூழலுக்கு ஏற்ற மருந்துகள் பரிந்துரைக்கப்படும்.
உடல்நலம் குன்றினாலும் நீரிழிவு மருந்துகள் வேண்டும்!பொதுவாக, உடல்நலம் சரியில்லாத போது ரத்த சர்க்கரை அளவும் அதிகரித்துவிடும். ஏதேனும் பக்க விளைவுகள், அசெளகரியங்கள் இருந்தால் உடனே மருத்துவருக்குத் தெரியப்படுத்துங்கள். ஆனால், அவருடைய ஆலோசனை இன்றி, நீரிழிவு மருந்துகளை நிறுத்திவிட வேண்டாம்.
ரத்த சர்க்கரை அளவீடுகள், தாழ்நிலை அல்லது உயர்நிலை சர்க்கரைக்கான அறிகுறிகள், இன்ன பிற பக்கவிளைவுகள் (வாந்தி, குமட்டுதல், சரும மாறுபாடுகள்) - இவை நம் உடலில் மருந்து எப்படி வேலை செய்கின்றன என்பதற்கான அறிகுறிகள்தான். இவற்றையும் மருத்துவருக்குத் தெரிவியுங்கள்.
மருந்துகளைப் பத்திரப்படுத்துங்கள்!எந்தச் செயலிலும் ஓர் ஒழுங்கு தேவைதானே?
இது மருந்துகளுக்கு மிகவும் பொருந்தும். மதியம் உட்கொள்ள வேண்டிய மருந்துகள் இருப்பின் அவற்றை கையோடு எடுத்துச் செல்வது அல்லது அலுவலகத்திலும் ஸ்டாக் வைப்பது போன்று திட்டமிட வேண்டும். அனைத்து ப்ரிஸ்க்ரிப்ஷன்களையும் ஒரே இடத்தில் வைத்துக்கொள்ள வேண்டும். மருந்துகள் எப்படியெல்லாம் மாற்றப்பட்டிருக்கின்றன என மருத்துவரும் அறிந்துகொண்டு, அதற்கேற்ப திட்டமிட இவை உதவும்.
மறக்க மாட்டோம் என்கிற நம்பிக்கை வரும் வரையிலும், மருந்து நேரங்களை மொபைல் போனில் ரிமைண்டர் வைத்துக் கொள்ளலாம். ஒரு வாரத்துக்கு முன்பே ஆர்டர் செய்வோம்!
கடைசி நேரக் குழப்பங்களைத் தவிர்ப்பதற்காக மாதம் ஒரு முறை மருந்துகள் வாங்கிக் கொள்வது நல்லது.
அதோடு, மருந்துகள் தீர்வதற்கு ஒரு வாரம் முன்பே ஆர்டர் செய்துவிடுவது அவசியம்.
ஒரு நாள்... ஏன் ஒரே ஒரு வேளை மருந்து எடுத்துக்கொள்ளாமல் இருப்பதுகூட விளைவுகளை உண்டாக்கும்!
தினமும் ஒரு 180 மி.லி.கேன் / பாட்டில் குளிர்பானம் அருந்துவது டைப் 2 நீரிழிவு அபாயத்தை 22 சதவிகிதம் அதிகரிக்கிறது.
- தாஸ் (மருத்துவர்)
No comments:
Write comments