பெங்களூரைச்சேர்ந்தவர் ருத்ரேஷ். ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தை சேர்ந்த இவர் இன்று காலை ஆர்.எஸ்.எஸ் நிகழ்ச்சி ஒன்றில் பங்கெடுத்துவிட்டு தனது மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்றுகொண்டிருந்திருக்கிறார். அவரை காமராஜா சாலை அருகே வழிமறித்த சிலர் கூர்மையான ஆயுதங்களை கொண்டு ருத்ரேஷை கடுமையாக தாக்கிவிட்டு தப்பிச்சென்றுவிட்டனர். இதனை கண்ட அங்குள்ள பொதுமக்கள் ருத்ரேஷை அருகிலுள்ள தனியார் மருத்துவனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு மருத்துவர்கள் ருத்ரேஷ் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
ருத்ரேஷின் கொலை சம்பவத்திற்கு தனிப்பட்ட பகை காரணமாக இருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிப்பதாக தெரிவித்துள்ளனர். எனினும் இது தொடர்பாக விசாரணை முடிக்கிவிடப்பட்டுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். ஆனால் இது தொடர்பாக ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் பெங்களூரு மாநகர செய்தி தொடர்பாளர் ராஜேஷ் கூறும்போது "இது திட்டமிட்ட படுகொலையாகும். ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியே இந்த கொலை. இதற்கு முன்னால் இது போன்ற கொலை சம்பவங்கள் நிறையவே நடைபெற்றுள்ளது. இக்கொலையை கண்டித்து ஆர்.எஸ்.எஸ் சார்பில் நாளை மிகப்பெரும் போராட்டம் நடத்தப்படும்" என தெரிவித்தார்.
இது தொடர்பாக முன்னாள் முதலமைச்சரும் பா.ஜ.கவின் மாநில தலைவருமான எடியூரப்பா கூறும்போது "இக்கொலை சம்பவத்தை பார்க்கும்போது மாநிலத்தில் எந்தளவிற்கு சட்ட ஒழுங்கு சீர்கெட்டுள்ளது என்பதை நாம் உணர்ந்து கொள்ளலாம். இத்தகைய கொலைச்சம்பவங்களை நிகழ்த்துவதின் மூலம் அரசுக்கு கொலையாளிகள் சவால் விடுகின்றனர். இதற்கு முன்னர் ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர் கொல்லப்பட்ட வழக்கில் கூட கைது செய்யப்பட்ட நபர்களை ஒரு சில மணி நேரத்தில் விடுவித்துள்ளது காங்கிரஸ் அரசு. " இவ்வாறு எடியூரப்பா தெரிவித்தார்.

No comments:
Write comments